பட்டுக்கோட்டை வட்டம், தம்பிக்கோட்டை மேலக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி விநாயகத்தேவர் (88). இவர் வயது மூப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானார்.
இந்நிலையில், அவரது மனைவி ராஜலெட்சுமி, மகன்கள் ஜோதி, ராமலிங்கம், சுப்பிரமணியன், மகள்கள் பாலசுந்தரி, ஞானோதயம், கமலா ஆகியோர் விநாயகத் தேவர் விருப்பப்படி அவரது கண்களை தானம் செய்ய முன்வந்தனர்.
தகவலறிந்த அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ.முகமது அப்துல்காதர் மற்றும் நிர்வாகிகள் தம்பிக்கோட்டை மேலக்காடு சென்று, இறந்த விநாயகத் தேவரின் இரு கண்களையும் தானமாகப் பெற்று, அவற்றை கும்பகோணம் அரவிந்த் கண் வங்கிக்கு அனுப்பிவைத்தனர். இதற்காக விநாயகத் தேவரின் குடும்பத்தினருக்கு அதிரை லயன்ஸ் சங்கத்தினர் நன்றி கூறினர்.