தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 11 மாட்டு வண்டிகளை வருவாய்த் துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர் அருகே பள்ளியக்ரஹாரம் - கூடலூர் சாலையில் வெண்ணாற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் திருடி செல்லப்படுவதாகத் தஞ்சாவூர் வட்டாட்சியர் ப. அருணகிரிக்கு தகவல் வந்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை வட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்குச் சென்றனர்.
அப்போது, பள்ளியக்ரஹாரம் - கூடலூர் சாலையில் வெண்ணாற்றின் கரையில் 2 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்பட்டு வருவது தெரிய வந்தது. இதையடுத்து இரு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், சற்றுத் தொலைவில் 5 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவது தெரிய வந்தது. வருவாய்த் துறையினர் வருவதைப் பார்த்த தொழிலாளர்கள் மாட்டு வண்டிகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இவற்றையும் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர், 7 மாட்டு வண்டிகளும் வட்ட அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.
இதேபோல, கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பகுதியில் அனுமதியின்றி மாட்டுவண்டிகளில் மணல் திருட்டு நிகழ்வதாகக் கிடைத்த தகவலின்பேரில், திருவிடைமருதூர் வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் விசாரித்தனர். அப்போது, வேட்டைமங்கலம், நரிமுடுக்கு கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் அள்ளி வந்த 4 மாட்டு வண்டிகளை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், 4 வண்டிகளையும் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.