பட்டுக்கோட்டையை அடுத்த புதுக்கோட்டை உள்ளூர் ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் பேச்சுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், காமராஜர் குறித்து பல்வேறு தலைப்புகளில் நடத்தப்பட்ட போட்டியில் 5 பள்ளிகளைச் சேர்ந்த 23 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கீழோர் பிரிவில் 6, 7, 8, 9 ஆகிய வகுப்புகளுக்கும், மேலோர் பிரிவில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கும் போட்டி நடத்தப்பட்டது. நடுவர்களாக பேராசிரியர் எம். ஏ.முகமது அப்துல் காதர், பள்ளி ஆசிரியைகள் எம். தயாநிதி, ஆர். உஷா ஆகியோர் செயல்பட்டனர்.
போட்டியில், கீழோர் பிரிவில் கே.விஷாலினி, பி.வீரமணி, எஸ். திவ்யதர்ஷினி ஆகியோரும், மேலோர் பிரிவில், அ.அருள்தேவி, சு.பஹ்மியா, அ.முகேஷ் ஆகியோரும் முதல் 3 இடங்களைப் பெற்றனர். இவர்கள் நினைவுப்பரிசு, சான்றிதழ் வழங்கிப் பாராட்டப்பட்டனர்.
நிகழ்ச்சிக்கு அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் எம். நிஜாமுதீன், எஸ்.எம். முகமது முகைதீன், என்.ஆறுமுகசாமி, எம். முகமது அபூபக்கர் மற்றும் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.