தஞ்சை மறை மாவட்டம், ஆதனூர் பங்கு புனித அன்னம்மாள் தேவாலய ஆண்டுப் பெருவிழாவில் வியாழக்கிழமை தேர் பவனி நடைபெற்றது.
இந்த தேவாலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது . தொடர்ந்து 7 நாள்கள் கொடி சுற்றுப் பவனியும், நவ நாள் திருப்பலி, சிறப்பு மறையுரைகள் நடைபெற்றது.
வியாழக்கிழமை மாலை சிறப்பு கொடி பவனியும், அதனை தொடர்ந்து பட்டுக்கோட்டை மறைவட்ட அதிபர் ஜோசப் செல்வராஜ் அடிகளார், வீரக்குறிச்சி அதிபர் தந்தை கிறிஸ்து அடிகளார், சஞ்சய் நகர் பங்குத் தந்தை அல்போன்ஸ் அடிகளார், புனல்வாசல் உதவி பங்குத் தந்தை விக்டர்அலெக்ஸ் அடிகளார், பட்டுக்கோட்டை புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளி தாளாளர் அடைக்கலராஜ் அடிகளார் ஆகியோரின் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இரவு 10 மணியளவில் 5 திருத்தேர்கள் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக பவனியாக தேவாலயம் வந்தடைந்தன.
வெள்ளிக்கிழமை காலை சிறப்பு பெருவிழா திருப்பலி ஆரோக்கியசாமி அடிகளார், லூர்துசாமி அடிகளாரின் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. அதில் 10 சிறுவர், சிறுமியர்களுக்கு புது நன்மை விழா நடைபெற்றது. அதன் பின்னர் புனித அன்னம்மாளின் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது. திருவிழா ஏற்பாடுகளை பங்குத் தந்தை லூர்துசாமி அடிகளார், சபை நிர்வாகிகள், அருட் கன்னியர்கள், பங்கு மக்கள் செய்திருந்தனர்.