தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் அரசுக் கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்த சங்கத்தின் பட்டுக்கோட்டை வட்டக் கிளைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்: பட்டுக்கோட்டையில் அரசுக் கலைக் கல்லூரித் தொடங்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படும் வகையில், இக்கல்லூரியைத் தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சென்னையிலிருந்து திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் ராமேசுவரத்துக்கு விரைவு ரயில் சேவை தொடங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவர் என்.சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். பொருளாளர் ஆர்.சிவசாமி வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார். செயலர் டி.மோகன்தாஸ், இணைச்செயலர் கே.பொன்முடி, டி.ஜோதி, கே.முனுசாமி உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். நிறைவில் கே.மணவாளன் நன்றி கூறினார்.