மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு ஏஐடியுசி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தொழிலாளர் நலச் சட்டங்கள் 44-ஐ நான்காகக் குறைப்பது, பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருப்பது, மத்திய பட்ஜெட்டில் பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக சலுகைகள் அறிவித்தது, பெட்ரோல் - டீசல் விலை உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியூசி மாவட்டச் செயலர் ஆர். தில்லைவனம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை ஏஐடியுசி மாநிலச் செயலர் சி. சந்திரகுமார் தொடக்கி வைத்துப் பேசினார். மாவட்டத் தலைவர் வெ. சேவையா, பொருளாளர் தி. கோவிந்தராஜன், துணைச் செயலர் துரை. மதிவாணன், அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்டப் பொதுச் செயலர் க. அன்பழகன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.