தஞ்சாவூர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் திறம்பட செயல்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்த தனிப்படையினரை மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவர் செவ்வாய்க்கிழமை பாராட்டினார்.
தஞ்சாவூர் மாவட்டக் காவல் அலுவலகத்தில் மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவர் வி. வரதராஜூ செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்து, களவு பொருள்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட உதவி ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான தனிப்படையினரையும், பட்டீசுவரம் காவல் சரகத்தில் கடந்த மாதம் பெண் கொலை வழக்கில் திறம்பட செயல்பட்டு, குற்றவாளியைக் கைது செய்த கும்பகோணம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் தலைமையிலான தனிப்படையினரையும் அவர் பாராட்டி வெகுமதி, பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
பின்னர், மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் காவல் துறைத் தலைவர் மரக்கன்றுகளை நட்டார். இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஜெ. லோகநாதன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன் கலந்து கொண்டனர். மேலும், ஒரத்தநாடு காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் காவல் துறைத் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.