தஞ்சாவூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 25 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என். வெங்கடாஜலத்துக்கு ரெகுலர் வட்டாட்சியர் பணியிடம் வழங்கப்படாததைக் கண்டித்தும், தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலகில், அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் நிலை வரையில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் அலுவலர்களை உடனடியாகப் பணி மாறுதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஜூலை 25-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர். தங்க பிரபாகரன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் பி.கே. சிவக்குமார், மாவட்டச் செயலர் தரும. கருணாநிதி, பொருளாளர் எம். அய்யம்பெருமாள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.