கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 15 ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) அனுசரிக்கப்பட உள்ளது.
கும்பகோணம் காசிராமன் தெரு, ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் பள்ளியில் 2004, ஜூலை 16-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் காயமடைந்தனர்.
இந்த தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜூலை 16-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகளை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில், செவ்வாய்க்கிழமை 15 ஆம் ஆண்டு நினைவு நாள் தீ விபத்து நிகழ்ந்த பள்ளி முன்பு அனுசரிக்கப்படவுள்ளது.
94 குழந்தைகளின் படங்களை அலங்கரித்து பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், அனைத்து பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தவுள்ளனர். அதன் பிறகு 94 குழந்தைகளின் பெற்றோர்களும் பழைய பாலக்கரையில் உள்ள இறந்த குழந்தைகளின் நினைவிடத்துக்குச் சென்று மெளன அஞ்சலி செலுத்தவுள்ளனர். மாலை 6 மணியளவில் பள்ளியில் இருந்து புறப்பட்டு மகாமகம் குளம் வரை மெளன ஊர்வலம் சென்று, இறந்த குழந்தைகளின் நினைவாக மோட்ச தீபம் ஏற்ற உள்ளனர்.