கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை தொழிலாளி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
கும்பகோணம் ரெங்கர் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் மகன் முத்துக்குமார் (40). மர வேலை தொழிலாளி. இவர் தனது வீட்டு மாடியில் சனிக்கிழமை இரவு தூங்கச் சென்றார். இவர் ஞாயிற்றுக்கிழமை காலை கட்டிலில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த கும்பகோணம் மேற்கு போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். முத்துக்குமாரின் மனைவி, மகன், மகள் திருச்சியில் வசித்து வருகின்றனர்.
கும்பகோணத்தில் உள்ள வீட்டில் முத்துக்குமாரும், அவரது தந்தையும் இருந்து வந்தனர். ஆனால், தந்தை சங்கரை ஞாயிற்றுக்கிழமை காணவில்லை. தந்தைக்கும், மகனுக்கும் மூன்று நாள்களாகச் சொத்துப் பிரச்னை இருந்து வந்தது. எனவே, மகன் முத்துக்குமாரை தந்தை சங்கர் கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகித்து, அவரைத் தேடி வருகின்றனர்.