தஞ்சாவூர்

"சம்பா பருவத்திற்கு நேரடி புழுதி விதைப்பு முறை உகந்தது'

28th Aug 2019 10:38 AM

ADVERTISEMENT

சம்பா பருவத்திற்கு நேரடி புழுதி விதைப்பு முறை உகந்தது என்றார் மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் திலகவதி. 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
 சம்பா நெல் சாகுபடி பருவத்தில் நேரடி புழுதி விதைப்பு  உகந்த முறையாகும். புழுதி விதைப்பு என்பது அவ்வப்போது கிடைக்கும் மழைக்கேற்ப நிலத்தை 2 அல்லது 3 முறை புழுதி உழவு செய்து கொள்ள வேண்டும். புழுதி விதைப்பு செய்யப்பட்ட விதைகள் மழை மூலமோ, பாசனம் மூலமோ, போதுமான  ஈரப்பதம் கிடைக்கும் போதோ முளைத்து வளரும். சம்பா பருவத்தில் நேரடி விதைப்புக்கேற்ற 155 நாள்களைக் கொண்ட  சி.ஆர் 1009 சப் 1 என்ற நெல் ரகத்தை பயன்படுத்த வேண்டும். நேரடி நெல் விதைப்புக்குப் பரிந்துரைக்கப்படும் விதை அளவான 1 ஏக்கருக்கு 35 கிலோ விதைகளைப் பயன்படுத்த வேண்டும். 
களைகளைக் கட்டுப்படுத்த ரசாயன களைக்கொல்லிகளை தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும். வயலில் கோரைகள் மற்றும் புல் வகை களைகள் இருந்தால் பிஸ்பைரிபேக் சோடியம் என்ற களைக்கொல்லியை 1 ஏக்கருக்கு 100 மி.லி.தெளித்து கட்டுப்படுத்தலாம். இக்களைக்கொல்லியை பயன்படுத்தும்போது நெல் வயலில் நீர் 
தேங்கியிருக்கக்  கூடாது. நேரடி நெல் விதைப்பில் பயிர் எண்ணிக்கை சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும். பயிர் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் களைத்து விட வேண்டும். 
நேரடி நெல் விதைப்பு முறையில் நாற்றங்கால் தயாரித்தல், நாற்றுப் பறித்தல், நடவு செய்தல் ஆகிய பணிகள் இல்லாததால் சாகுபடிசெலவு மிகவும் குறையும். எனவே, நடப்பு சம்பா பருவத்தில் நீரை சேமிக்கும் வகையில், நேரடி புழுதி விதைப்பு முறை மூலம் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் அரசின் உழவு மானியத்தையும் பெற்று பயனடையலாம்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT