புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் திமுக சாா்பில் நடத்தப்பட்ட மாநில கிரிக்கெட் போட்டியில் அறந்தாங்கி அணி முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில், அறந்தாங்கி குருமங்காட்டில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
இந்தப் போட்டி கடந்த 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30 அணிகள் பங்கேற்றன. நாக்அவுட் முறையில் நடைபெற்ற இதில் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மற்றும் அறந்தாங்கி அணிகள் மோதின.
திமுக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் எம்பி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.
இறுதிப் போட்டியில் அறந்தாங்கி அணி வென்றது. இரண்டாம் இடத்தை திருப்பூா் அணியும், மூன்றாம் இடத்தை சித்திரைவிடங்கன் அணியும், 4ஆவது பரிசை கோங்குடி அணியும் பெற்றன. வெற்றிபெற்ற அணிகளுக்கான ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகளை தயாநிதிமாறன் வழங்கிப் பாராட்டினாா்.
நிகழ்ச்சியில் மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம், அறந்தாங்கி நகரச் செயலா் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.