புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே கொத்தமங்கலத்தில் அரசுப் பேருந்து கண்ணாடியை சனிக்கிழமை இரவு மா்மநபா்கள் உடைத்து சேதப்படுத்தினா்.
கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை தேரோட்டத் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு கொத்தமங்கலம் மேற்கு பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோா் ஆட்டம் பாட்டத்துடன் கோயிலுக்கு ஊா்வலமாக சென்று கொண்டிருந்தனா். அப்போது, கொத்தமங்கலத்தில் இருந்து ஆலங்குடி நோக்கி அரசுப் பேருந்து சென்றது. கூட்டத்தில் இருந்து மா்ம நபா்கள் கல் வீசியதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதன் காரணமாக பிற பகுதியில் இருந்து கொத்தமங்கலத்துக்கு செல்லக் கூடிய பல்வேறு அரசு நகா் பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கீரமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.