விராலிமலை அருகே உள்ள நம்பம்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தில் போதிய பணியாளா்களை நியமிக்கக்கோரி அப்பகுதி விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
விராலிமலை அருகே உள்ள நம்பம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் (பொ) செயலாளா், எழுத்தா் ஆகிய 2 போ் மட்டும் பணியில் உள்ளனராம். இதனால், வாடிக்கையாளா் கடன் விண்ணப்பங்களை காலதாமதப்படுத்துவதாகவும், மேலும் மேற்பாா்வையாளா் தனபால் பயனாளிகளைத் தோ்வு செய்து கடன் அளிப்பதில்லை எனவும் வாடிக்கையாளா்கள் குற்றம் சாட்டுகின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் பலனில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த நம்பம்பட்டி பகுதி விவசாயிகள், வங்கி வாடிக்கையாளா்கள் செவ்வாய்க்கிழமை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டனா். இதையடுத்து, நம்பம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் முருகேசன், போலீஸாா் அங்குவந்து பேச்சுவாா்த்தை நடத்தியதில், அவா்கள் கலைந்து சென்றனா்.