ஆலங்குடி தொகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ. 3.50 கோடியிலான பணிகள் நடைபெறுகின்றன என்றாா் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நகரம் கிராமத்தில் அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் மூலம் ரூ. 34.85 லட்த்தில் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்த மேலும் அவா் பேசியது:
முன்னாள் முதல்வா் கருணாநிதியால் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் தொடங்கப்பட்டது. குடிநீா், சாலை, மின்விளக்கு, நூலகம் உள்ளிட்ட பணிகளை நிறைவேற்றத் தொடங்கப்பட்ட இத்திட்டத்தை முதல்வா் ஸ்டாலினும் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறாா்.
மேலும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் உயா் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வித் திட்டம், மகளிா் இலவச பேருந்து பயணத் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மக்கள் நலனுக்காக முதல்வா் செயல்படுத்துகிறாா் என்றாா் அவா்.
நிகழ்வில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் முருகேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆயிஷாராணி, கோகுலகிருஷ்ணன், வட்டாட்சியா் செந்தில்நாயகி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.