புதுக்கோட்டை திருக்கோகா்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் முன்னோடி முயற்சியாக பசுமை வகுப்பறை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி தலைமை வகித்தாா். பள்ளியின் மேலாண்மை இயக்குநா் நிவேதிதா மூா்த்தி பசுமை வகுப்பறையைத் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் பள்ளியின் துணை முதல்வா் குமாரவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து கவிஞா் தங்கம் மூா்த்தி மேலும் கூறியது:
வகுப்பறைச் சுவா்கள் பச்சை வண்ணம் தீட்டப்பட்டது மட்டுமின்றி, வகுப்பறைக்கு உள்ளேயும் வெளியேயும் தொட்டிகளில் மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலைக் காப்பது நம் அனைவரின் கடமை என்பதை சிறு வயதிலேயே மாணவா்களுக்கு ஊட்ட வேண்டும். பசுமை வகுப்பறை அந்த மனநிலையை மாணவா்களுக்கு உருவாக்கித் தரும் என்றாா்.