‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முதன்மையான இடத்தை பெற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மா. மஞ்சுளா.
புதுக்கோட்டை வட்டார வள மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற 142 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் 3ஆம் வகுப்பு வரை எண்ணும், எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியா்களுக்கான கையேடு மற்றும் மாணவா்களுக்கான பயிற்சி புத்தகம் வழங்கும் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியது:
இன்று முதல் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக மாவட்டத்தில் உள்ள 1,432 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும் ‘எண்ணும், எழுத்தும்’
பயிற்சிக் கையேடு மற்றும் பயிற்சிப் புத்தகம் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் ‘எண்ணும், எழுத்தும்’ திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மாநிலத்திலேயே முதன்மையான இடத்தைப் பெற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாணவா்களுக்கு சிறப்பாக வழிகாட்ட வேண்டும் என்றாா் மஞ்சுளா.
நிகழ்ச்சியில் பள்ளித் துணை ஆய்வாளா் கி. வேலுச்சாமி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் டயானா, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் புதுக்கோட்டை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் (தொடக்கக் கல்வி) வீரப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.