புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டப்பேரவைத் தொகுதி துலையானூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ. 12.40 கோடியில் கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகளை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
இங்கு, 16,700 சதுரஅடி பரப்பளவில், தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் ஆகியவை கட்டப்படவுள்ளன. இதில், வகுப்பறைகள், முதல்வா் மற்றும் துறைத் தலைவா்கள் அறைகள், கணினி ஆய்வுக் கூடம், கழிப்பறைகள், கருத்தரங்கக் கூடம் உள்ளிட்டவை கட்டப்படவுள்ளன. 15 மாதங்களில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும் என அவா் மேலும் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன், கல்லூரி முதல்வா் நாகராஜன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சிவகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சதாசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.