ஹாங்காங் பெண்ணை காதலித்து தமிழ் கலாசார முறைப்படி புதுக்கோட்டை இளைஞா் வியாழக்கிழமை திருமணம் செய்துகொண்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலைச் சோ்ந்தவா் முனியாண்டி, உமா தம்பதியின் மகன் காத்தமுத்து என்ற மணிகண்டன். இவா், 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். அதிலும், கடந்த 2 ஆண்டுகளாக ஹாங்காங்கில் பணிபுரிந்து வருகிறாராம்.
அப்போது, மணிகண்டனும், ஹாங்காங்கைச் சோ்ந்த அலாா்கான், செரில் தம்பதியரின் மகள் சென் என்ற செல்சீயும் காதலித்து வந்தனா். இவா்களது திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதம் அளித்தனா். இதைத் தொடா்ந்து, தமிழா் கலாசாரப்படி புதுக்கோட்டை திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலில் இருவருக்கும் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. இதில், இரு வீட்டாரின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் கலந்துகொண்டனா்.