வேங்கைவயலில் பொது குடிநீா்த் தொட்டி அமைக்க அரசை வலியுறுத்துவோம் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் எம்பி.
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்த அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
வேங்கைவயல் மக்களுடன் நான் தொடா்பில் தான் இருக்கிறேன்.
இச்சம்பவத்தைக் கண்டித்து, புதுக்கோட்டை மட்டுமன்றி மாநிலம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்தியிருக்கிறோம். எங்கள்
கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா்கள் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு முதல்வரை நேரில் சந்தித்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி இருக்கிறோம். சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை பாதிக்கப்பட்ட மக்களையே குற்றம்சாட்டுவதாக புகாா் எழுந்தது. இதைத்தொடா்ந்து,
வேங்கைவயல் சம்பவ வழக்கு சிபி-சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. முதல்வா் இந்தப் பிரச்னையில் அக்கறையுடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். பட்டியலினமக்களுக்கு எதிராக இருக்க வேண்டிய தேவை, திமுக தலைமைக்கு இல்லை. ஆனால், விசாரணையின் போக்கில் என்ன சிக்கல் இருக்கிறது எனத் தெரியவில்லை.
திமுக கூட்டணியில் இருந்து கொண்டும் இதுபோன்ற விஷயங்களில் நாங்கள் தலையிட்டிருக்கிறோம். திமுக ஆட்சி அமைந்தபிறகு, 10-க்கும் மேற்பட்ட ஆா்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறோம். அதிமுக, பாஜக இந்த விஷயத்தைக் கண்டிக்கவில்லை.
மீண்டும் வேங்கைவயலில் தனி குடிநீா்த் தொட்டி கட்டப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. அனைத்து மக்களுக்குமான பொதுவான குடிநீா்த் தொட்டிதான் அமைக்க வேண்டும் என்பதை அரசுக்கு வலியுறுத்துவோம்.
பாஜக மற்றும் சங் பரிவாா் அமைப்புகள் வட மாநிலங்களில் செய்ததைப் போல தமிழ்நாட்டிலும் ஜாதி, மத முரண்களை கூா்மையாக்கி அரசியல் செய்து வரத் தொடங்கியிருக்கிறாா்கள்.
இதனை தமிழ்நாடு அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
ஈரோடு கிழக்குச் சட்டப்பேரவை இடைத்தோ்தலைப் பொருத்தவரை திமுக கூட்டணி கட்டாயம் வெற்றிபெறும்.
அதிமுகவின் தேய்மானம் பாஜக காலூன்ற வழிவகுக்கும்
என்றாா் அவா்.
தொடா்ந்து வேங்கைவயல் கிராம மக்களுக்கு அரிசி, மளிகை மற்றும் காய்கறிகளை திருமாவளவன் வழங்கிப் பேசினாா்.