புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே அங்கன்வாடி மையம் கட்டடம் சுற்றுப்புறத் தூய்மையின்றியும், உரிய பராமரிப்பின்றியும் இருப்பதால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாக பெற்றோா் குற்றம்சாட்டுகின்றனா்.
விராலிமலை அருகே உள்ள பொருவாயில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம் உள்ளது. இங்கு பொருவாய், கீழ பொருவாய், கோயில்காட்டுப்பட்டி, ஆதிதிராவிடா் காலனி,கொடியங்காட்டு பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 30 குழந்தைகள் படித்து வருகிறாா்கள். இந்த அங்கன்வாடி மையக் கட்டடம் உரிய பராமரிப்பின்றி இருப்பதாலும், கட்டடத்தின் அருகே இறைச்சிக் கடை செயல்படுவதாலும் சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், இந்தக் கட்டடம் மிகவும் சேதமடைந்து பொலிவிழந்து காணப்படுவதுடன், ஆங்காங்கே எலிகள் தோண்டிய குழிகள் கட்டடத்தைச் சுற்றி இருப்பதால் அங்கன்வாடி மையம் வரும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதுதவிர, சுற்றுச்சுவா் இல்லாததும், மையத்தைச் சுற்றிலும் புல் பூண்டுகள் மண்டிக் கிடக்கிறது. எனவே, அங்கன்வாடி மையக் கட்டடத்தை சுற்றுச்சுவருடன் கூடியதாகவும், தூய்மைப் பணிகள் மேற்கொண்டு குழந்தைகள் பாதுகாப்புக்கு உகந்ததாக ஆக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிா்பாா்ப்பாகும்.