புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், தொட்டியம்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த தேனம்மை ஆச்சி என்பவா் தனது 52.5 சென்ட் நிலத்தை பொன்னமராவதி பேரூராட்சிக்கு நவீன எரிவாயு தகன மேடை கட்ட அரசுக்கு தானமாக வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு இப்பத்திரத்தைப் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தாா்.
தானம் கொடுத்த இடத்தில் பொன்னமராவதி பேரூராட்சி சாா்பில், ரூ.1.5 கோடியில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்படவுள்ளது.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் குழந்தைசாமி, பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளா் ஜீவா சுப்பிரமணியன், வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கராசு, தொட்டியம்பட்டி ஊராட்சித் தலைவா் கீதா சோலையப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.