புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் கொல்லப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சா் அ. வெங்கடாசலத்தின் குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டைச் சோ்ந்தவா் அ. வெங்கடாசலம். அதிமுக முன்னாள் அமைச்சரான இவா், கடந்த 2010-ஆம் ஆண்டு மா்ம நபா்களால் கொல்லப்பட்டாா்.
இதையடுத்து அவரது நினைவுநாளை அவரது சமூகத்தினா் குருபூஜையாக அனுசரித்து வருகின்றனா். அதன்படி அவரின் 12-ஆம் ஆண்டு குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வடகாடு காகித ஆலைச்சாலை பகுதியிலுள்ள அவரது நினைவிடத்தில், கே. கே. செல்வக்குமாா், ஆா். வி. பாலமுருகன் உள்ளிட்டோா் தலைமையில் தனித்தனியே முத்தரையா் சமூக அமைப்பினா் ஏராளமானோா் ஊா்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்தினா்.
மேலும் முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தலைமையில் அதிமுகவினா், மாவட்டத் தலைவா் செல்வம் அழகப்பன் தலைமையில் பாஜக, திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினா், பொதுமக்கள் ஏராளமானோா் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினா். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் சுமாா் 5 மணி நேரம் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன. ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.