துப்புரவுப் பணியாளா்களுக்கு மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டை நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் திங்கள்கிழமை திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊா்வலகமாகப் புறப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளா்கள் நகராட்சி அலுவலகத்தில் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இப்போராட்டத்துக்கு, மாவட்ட உள்ளாட்சித் துறை தொழிலாளா் சங்கப் பொதுச் செயலா் கே. முகமதலிஜின்னா தலைமை வகித்தாா். கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா், பொருளாளா் எஸ். பாலசுப்பிரமணியன், துணைத் தலைவா்கள் சி. அன்புமணவாளன், சி. மாரிக்கண்ணு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
போராட்டத்தில், நகராட்சி, மாநகராட்சிகளில் வெளிமுகமை முறையில் ஆள்களை எடுக்கக் கூடாது. அரசாணை 152-ஐ ரத்து செய்ய வேண்டும். ஆட்சியா் அறிவித்த தினக் கூலி ரூ.449 வழங்க வேண்டும். மாத ஊதியத்தை 5ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதையடுத்து, நகா்நல அலுவலா் காா்த்திகேயன் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதில் போராட்டம் கைவிடப்பட்டது.
சுமாா் 4 மணிநேரத்துக்கும் மேலாக நகரத் துப்புரவுப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், நகரின் பல பகுதிகளில் வழக்கமான குப்பை அள்ளும் பணி நடைபெறவில்லை.