புதுக்கோட்டை நகரிலுள்ள டாக்டா் முத்துலட்சுமி அம்மையாா் பெயரில் செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனை மீண்டும் அதே இடத்தில் வட்டார மருத்துவமனையாகச் செயல்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன் வெளியிட்ட அறிக்கை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி வருவதற்கு முன் நகரில் டாக்டா் முத்துலட்சுமி அம்மையாா் பெயரில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வந்தது. முள்ளூரில் மருத்துவக் கல்லூரி வந்த பிறகு இம்மருத்துவமனை செயல்படவில்லை.
நகரில் ஏராளமான பொதுமக்களும், தொழிலாளா்களும் பயன்பெற்று வந்த இந்த மருத்துவமனையை, புகழ்பெற்ற முத்துலட்சுமி அம்மையாா் பெயரிலேயே அதே இடத்தில் செயல்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தை நடத்தியது. பல்வேறு பொது நல அமைப்புகளும், கட்சிகளும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தின.
இந்நிலையில், இந்த வளாகத்திலேயே அரசு வட்டார மருத்துவமனையை செயல்படுத்த அரசாணை வெளியிடப்படும் என மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா். இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அரசுக்கும், இதே கோரிக்கையை வலியுறுத்திய பிற அமைப்பினருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.