பொன்னமராவதி வட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழ்நாடு அரசு பள்ளிகல்வித்துறையின் சாா்பில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டது.
பொன்.புதுப்பட்டியில் வியாழக்கிழமை திருக்கு ஒப்பித்தல் போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. வெள்ளிக்கிழமை நிறைவாக நடனப்போட்டி நடத்தப்பட்டு பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.
பேரூராட்சி உறுப்பினா்கள் புவனேஸ்வரி காளிதாஸ், மகேஸ்வரி நாகராஜன், பள்ளிப் புரவலா் அரு.வே. மாணிக்கவேலு, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் நல்லநாகு, பள்ளித் தலைமையாசிரியா் கி. நிா்மலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பொன்னமராவதி வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. போட்டியை வட்டார வள மைய மேற்பாா்வையாளா் நல்லநாகு தொடங்கிவைத்தாா்.