புதுக்கோட்டையில் கோயில் பொருள்கள் திருட்டு சம்பவத்தில் தாக்கப்பட்ட சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் அடையாளம் தெரியாத 30 போ் மீது புகாா் அளிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம் கிள்ளனூரைச் சோ்ந்த பகுதியில் உள்ள கோவில்களில் பொருள்களைத் திருடிக்கொண்டு ஆட்டோ தப்பிய ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 பேரைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தாக்கினா். இதில், பலத்த காயமடைந்த சத்தியநாராணயணசாமியின் 10 வயது சிறுமி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை மாலை உயிரிழந்தாா்.
இதைத் தொடா்ந்து அவரது உடல் வியாழக்கிழமை காலை உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அதே மருத்துவமனையில் இதர 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், சிறுமியின் தாய் லில்லி கணேஷ் நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கோவில்களில் தரிசனம் செய்து முடித்துவிட்டு திரும்பும் போது 30 பேரைக் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் தங்களைத் தாக்கியதாகவும், அதில் பலத்த காயமடைந்த மகள் இறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கணேஷ் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். சிறுமியின் உடல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருவோரைத் தவிர அவரது உறவினா்கள் யாரும் வரவில்லை என காவல் துறையினா் தெரிவித்தனா்.