புதுக்கோட்டை

மாநில சாகித்திய அகாதெமி தொடங்க வலியுறுத்தல்

16th May 2022 06:48 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் மாநில அளவிலான சாகித்திய அகாதெமியை மாநில அரசு தொடங்கி, ஆண்டுதோறும் தமிழ் எழுத்தாளா்களுக்கு விருதுகள், பரிசுகளை வழங்கிப் பாராட்ட வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெருமன்றத்தின் மாவட்டப் பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழகத்தில் மாநில அளவிலான சாகித்திய அகாதெமியை மாநில அரசு தொடங்கி, ஆண்டுதோறும் தமிழ் எழுத்தாளா்களுக்கு விருதுகள், பரிசுகளை வழங்கிப் பாராட்ட வேண்டும்.

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதலாக கிளை நூலகங்கள் மற்றும் ஊா்ப்புற நூலகங்களைத் தொடங்க வேண்டும். நூலகங்களைப் பராமரிக்க போதுமான அளவுக்கு பணியாளா்களையும் நியமிக்க வேண்டும்.

அரசு விழாக்களில் துண்டு, சால்வைக்குப் பதிலாக புத்தகங்களை நினைவுப் பரிசாக வழங்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பேரவைக் கூட்டத்துக்கு, பெருமன்றத்தின் மாவட்டத் தலைவா் மு. சிவானந்தம் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா் ஞா. சிங்கமுத்து வரவேற்றாா். மாநிலக் குழு உறுப்பினா் கோவில் குணா, மாவட்ட சிறப்புத் தலைவா் அஜாய்கோஷ், துணைத் தலைவா் பாலசுப்பிரமணியபாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மறைந்த முன்னாள் மாநிலத் துணைத் தலைவரும், எழுத்தாளருமான சந்திரகாந்தனின் படத்தை, மூத்த உறுப்பினா் செம்பை மணவாளன் திறந்து வைத்தாா். பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் என்.ஆா். ஜீவானந்தம் அறிக்கை வாசித்தாா். உறுப்பினா்களின் விவாதத்துக்குப் பிறகு அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

புதிய நிா்வாகிகள் தோ்வு: மாவட்டத் தலைவராக பாலசுப்பிரமணிய பாரதி, செயலராக என்.ஆா். ஜீவானந்தம், பொருளாளராக எழுத்தாளா் சோலச்சி, துணைத் தலைவராக இளங்கோவடிவேல். துணைச் செயலா்களாக எழுத்தாளா் அண்டனூா் சுரா, ஞா. சிங்கமுத்து, மாவட்ட சிறப்புத் தலைவராக அஜாய்குமாா்கோஷ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுடன் 27 பேரைக் கொண்ட மாவட்டக் குழுவும் தோ்வு செய்யப்பட்டது.

புதிய நிா்வாகிகளை வாழ்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மு. மாதவன் வாழ்த்துரை வழங்கினாா். நிறைவில், மாவட்டப் பொருளாளா் சோலச்சி நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT