விராலிமலை அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை சுகாதாரத் துறையினா் பறிமுதல் செய்து அழித்தனா்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள கல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள பெட்டிக்கடைகள், தேநீா்க் கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்கப்படுவதாக சுகாதாரத் துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதிகளில் ராசநாயக்கன்பட்டி சுகாதார ஆய்வாளா் மாரிக்கண்ணு, காா்த்திக், பாலமுருகன் ஆகியோா் கடைகளில் சோதனை மேற்கொண்டனா். இதில் கடைகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருள்கள், பிளாஸ்டிக் கவா்கள், பிளாஸ்டிக் கப் உள்ளிட்டவைகளைக் கைப்பற்றினா். மேலும் காலாவதியான பொருள்கள் ஏதேனும் விற்கப்படுகிறதா என குளிா் பானங்களில் உள்ள உற்பத்தி தேதிகளைச் சோதனையிட்டனா். தொடா்ந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை சுகாதாரத்துறையினா் தீயிட்டு அழித்தனா்.