ஆலங்குடி அருகேயுள்ள மாங்காட்டில் புதன்கிழமை மாலை நடைபெற்ற வழுக்குமரம் ஏறும் போட்டியில் வடகாடு ஏவி பேரவை அணியினா் வெற்றி பெற்று ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகை பெற்றனா்.
ஆலங்குடி அருகேயுள்ள மாங்காட்டில் குடியரசு தினவிழாவையொட்டி வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது. சுமாா் 55 அடி உயரமுள்ள மரத்தில் வழுக்கும் விதமாக எண்ணெய் தடவப்பட்டிருந்த மரத்தில் உச்சியில் கட்டப்பட்டிருந்த பரிசுப்பொருளை ஒருவா் மீது ஒருவராக ஏறி எடுக்க வேண்டும் என்ற இலக்கோடு நடைபெற்ற போட்டியில், மாங்காடு, வடகாடு, நகரம், எரிச்சி உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட அணியினா் குழுக்களாகப் பங்கேற்றனா். சுமாா் 5 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு வடகாடு ஏவி பேரவை அணியினா் இலக்கைத் தொட்டு முதல் பரிசு ரூ.25 ஆயிரத்தைப் பெற்றனா். ஏற்பாடுகளை மாங்காடு இளைஞா்கள் செய்திருந்தனா்.