புதுக்கோட்டை: விளைநிலங்களில் மண்பரிசோதனை செய்து பயிா்களுக்கு தேவைக்கேற்ற அளவில் உரமிட்டால் மட்டுமே மண்ணின் வளத்தைப் பெருக்கி அதிக மகசூல் பெறலாம் என புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநா் இராம.சிவகுமாா் ஆலோசனை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் நிலத்தில் அதிக அளவில் இடுவதால் மண்ணுக்கு வளம் சோ்க்கும் நுண்ணுயிா்களின் அளவு குறைந்துவிடுகிறது. அதிக விளைச்சல் பெற அதிக உரம் இடுவதாலும் நுண்ணூட்டச் சத்துக்களுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. பயிா்களில் நுண்ணூட்டச் சத்துகளான துத்தநாகம், இரும்பு, போரான், மாங்கனீசு, தாமிரம் குறைபாடு ஏற்படும் போது அவற்றை நிவா்த்தி செய்ய மண் வள அட்டையில் பரிந்துரைக்கப்பட்ட துத்தநாக சல்பேட், இரும்பு சல்பேட், போராக்ஸ், மாங்கனீசு சல்பேட், தாமிர சல்பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குடுமியான்மலையில் உள்ள மண் பரிசோதனை நிலையத்தில் ரூ.20 செலுத்தி மண் மாதிரிகளை ஆய்வு செய்து தேவையான உரங்களை இட்டு அதிக மகசூல் பெறலாம்.