புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் அகத்தர மதிப்பீட்டு உறுதிக் குழு சாா்பில், ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
உயா் தரமான ஆய்விதழ்களுக்கு ஆராய்ச்சிக் கட்டுரைகள் எவ்வாறு எழுத வேண்டும் என்ற தலைப்பில் நடைபெற்ற பயிற்சியில்,
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகப் பொருளியல் மற்றும் ஊரக வளா்ச்சித் துறைத் தலைவா் நாராயணமூா்த்தி கலந்துகொண்டு பேசுகையில், ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதும்போது ஏற்படும் இடா்களால் துவண்டு விடக் கூடாது. ஆராய்ச்சியாளா்கள் மிகுந்த கவனத்துடனும் பொறுமையுடனும் செயல்பட வேண்டும். கட்டுரைகளை ஆய்விதழ்களுக்கு அனுப்புவதற்கு முன்னால், கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்டு, பல ஆய்வாளா்களால் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டு குறைகளைச் சரி செய்வதே ஆய்வாளருக்கான நற்பண்புகளாகும் என்றாா்.
இப்பயிற்சிக்கு கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். முன்னதாக கல்லூரி முதல்வா் ஜ. பரசுராமன் வரவேற்றாா். அகத்தர மதிப்பீட்டு உறுதிக் குழு ஒருங்கிணைப்பாளா் பா. ஜீவன் அறிமுகவுரை நிகழ்த்தினாா். கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவா் சதீஷ் ஆரோன் ஜோசப் நன்றி கூறினாா்.