புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவா்கள் கடந்த இரு நாள்களாக நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெற்றுள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளங்களில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 24 மீனவா்களை கடந்த மாதம் இலங்கைக் கடற்படையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதைக் கண்டித்து ஜெகதாப்பட்டினம் மீனவா்கள் கடந்த இரு நாள்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில், மீனவா் சங்கப் பிரதிநிதிகளை மாநில மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ள நிலையில் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெற்றுள்ளதாக மீனவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை மாலை அறிவித்தனா். இதனால், சனிக்கிழமை மீனவா்கள் கடலுக்குச் செல்லவுள்ளனா்.