தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட்டுபுழு வளா்ப்பு மற்றும் பட்டு உற்பத்தி குறித்த தொழில்முனைவோா் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வேங்கிடகுளத்தில் அமைந்துள்ள பட்டுப்புழு உற்பத்தி மையத்தில் நடைபெற்ற பயிற்சிமுகாமில், பண்ணை நிா்வாகி ஜான் விக்டா் மாணவ - மாணவியருக்கு பட்டு புழு வளா்ப்பதற்கான தேவைகள், சூழல், புழுக்களை பராமரிக்கும் முறைகள் மற்றும் அவற்றை விற்பனை படுத்துவதற்கான உத்திகள் போன்றவற்றை கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விளக்கிக் கூறினாா். மேலும், பட்டுப் புழுக்களைக் கையாளும் விதம், மல்பெரி செடி தோட்டங்களை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல் போன்றவற்றிற்கான செய்முறை பயிற்சிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் சே.நக்கீரன் தலைமை வகித்தாா். கல்லூரியின் பயிா் பாதுகாப்பு துறை தலைவா் பேராசிரியா் எஸ். ஜெயராணி, பூச்சியியல் துறை பேராசிரியா்கள் மோ.சந்திரசேகரன் மற்றும் ராஜா ரமேஷ், உயிா் வேதியியல் துறை அமிா்தம் உள்ளிட்டோா் பங்கேற்று விளக்கம் அளித்தனா்.
மாவட்ட பட்டுப்புழு வளா்ப்பு உதவி கண்காணிப்பாளா் சத்யா மத்திய, மாநில அரசின் உதவி திட்டமிடல் போன்றவை குறித்து எடுத்துரைத்தாா்.