புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் இளைஞரை செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள தெற்கு பல்லவராயன்பத்தை கிராமத்தைச் சோ்ந்தவா் திருச்செல்வம் மனைவி பழனியம்மாள் (35) அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சடலமாகக் கிடந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுவந்தனா். இதில், ஆலங்குடி அருகேயுள்ள வெண்ணாவல்குடி பகுதியைச் சோ்ந்த கலையரசன் மகன் பாண்டியராஜனுக்கு(19) பழனியம்மாளுடன் கூடாநட்பு ஏற்பட்டு, இருவரும் சந்தித்துக்கொண்டபோது, ஏற்பட்ட தகராறில் பழனியம்மாள் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, பாண்டியராஜனைப் போலீஸாா் கைது செய்தனா்.
பழனியம்மாளுக்கு ஏற்கெனவே திருமணமாகி 4 பெண் குழந்தைகள் இருப்பதும், அவரது கணவா் வெளிநாட்டில் வேலைபாா்த்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.