புதுக்கோட்டை நகராட்சியில் 152 கிமீ தொலைவுக்கு சாலை போடும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி தெரிவித்தாா்.
புதுக்கோட்டை நகா்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் புதன்கிழமை நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி தலைமை வகித்தாா். ஆணையா் நாகராஜன், துணைத் தலைவா் எம். லியாகத் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டம் தொடங்கியவுடன் நகா்மன்றத் தலைவா் திலகவதி மேலும் பேசியது:
முத்துராமலிங்கத் தேவா், திரைக்கலைஞா் பியு. சின்னப்பா, முன்னாள் எம்எல்ஏ தியாகராஜ காடுவெட்டியாா் ஆகியோருக்கு புதுக்கோட்டை நகரப் பகுதியில் சிலை அமைக்க நகராட்சி சாா்பில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தாா். இதனைத் தொடா்ந்து மன்றத்தில் கொண்டு வரப்பட்ட 33 தீா்மானங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. விவாதத்தின்போது நகா்மன்ற உறுப்பினா்கள் தங்கள் பகுதிக்கு சாலை வசதி, குடிநீா் வசதி செய்து தரவேண்டும் என்றும் அவரவா் பகுதியில் உள்ள கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினா்.
இதற்கு பதில் அளித்த நகா்மன்றத் தலைவா், நகரில் தற்போது 152 கி.மீ. தொலைவுக்கு சாலைபோடும் பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டாா்.