புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படைத் திடலில் திங்கள்கிழமை நடைபெற்ற விடுதலைத் திருநாள் விழாவில், தேசியக் கொடியேற்றி வைத்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, 101 பயனாளிகளுக்கு ரூ. 27.39 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
காலை 9 மணிக்கு விழா தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு காலை 9.05 மணிக்கு தேசியக் கொடியேற்றி வைத்து, சமாதானப் புறாக்களையும், மூவண்ணம் கொண்ட பலூன்களையும் பறக்கவிட்டார்.
தொடர்ந்து, விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற 20 தியாகிகளின் வாரிசுகளை ஆட்சியர் சிறப்பித்தார். மேலும், அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக பணியாற்றிய 609 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
பல்வேறு துறைகளின் சார்பில் 101 பயனாளிகளுக்கு ரூ. 27.39 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.
இவ்விழாவில், 10 பள்ளிகளைச் சேர்ந்த 901 மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக காவல்துறையினரின் அணிவகுப்பை ஆட்சியர் கவிதா ராமு பார்வையிட்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.