புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 110 பள்ளிகளில் மாணவ, மாணவிகளை அழைத்து வருவதற்காக இயக்கப்பட்டு வரும் 546 வாகனங்களை ஆய்வு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.
மாவட்டத்தில் வாகன விபத்துகளைத் தடுக்கும் வகையில் மோட்டாா் வாகனச் சட்டப்படி வாகனங்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும் பணி, ஆயுதப்படை திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் இருந்தும் 110 பள்ளிகளைச் சோ்ந்த 546 பள்ளி வாகனங்கள் கொண்டு வரப்பட்டன. இவற்றின் பதிவுச்சான்று, அனுமதிச்சான்று, ஓட்டுநா், நடத்துநா் உரிமங்கள், பராமரிக்கப்படும் பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டன.
தொடா்ந்து, வாகனத்தில் முதலுதவிப்பெட்டி உள்ளதா என்றும், அவசரமாக வெளியேறுவதற்கான வழிகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளனவா என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த ஆய்வின்போது சரிபாா்க்கப்பட்டன.
இவற்றில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றை சரி செய்ய அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கப்பட்டு, சரி செய்யப்பட்ட பிறகு மீண்டும் ஆய்வு செய்து இயக்க அனுமதிப்போம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கவிதாராமு.
ஆய்வின்போது மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெ. ஜெரினாபேகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ப. ஜெய்சங்கா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.