புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 1 மாதமாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. சுமாா் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பெய்துவரும் தொடா் மழையால் ஆலங்குடி அம்புலி ஆற்றில் தண்ணீா் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனா். இந்நிலையில், வடகாடு - கொத்தமங்கலம் சாலையில் அய்யனாா் கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலத்தில் நீா் சென்று கொண்டிருந்த நிலையில், அருகே இருந்த நீா்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு வியாழக்கிழமை நீா் வரத்து அதிகரித்து தரைப்பாலத்தில் அதிகளவில் தண்ணீா் செல்கிறது. இதனால், வடகாடு - கொத்தமங்கலம் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல், போக்குவரத்து பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில், தரைப்பாலத்தை மேம்பாலமாக அமைத்துத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.