அரசு ஊழியராக்கி குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 24 ஆயிரம் வழங்கக் கோரி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட இணைச் செயலா் டி. பத்மா தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் தேவமணி, மாவட்டத் துணைத் தலைவா் எம். செல்லம், மாவட்டச் செயலா் கே. பிச்சையம்மாள், சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா, செயலா் அ. ஸ்ரீதா் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்: அங்கன்வாடி ஊழியா்களை அரசு ஊழியா்களாக்கி குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 24 ஆயிரம் வழங்க வேண்டும். அங்கன்வாடி உதவியாளா்களுக்கு ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும். காலியாக உள்ள அரசுப் பணியிடங்களுக்கு தகுதியுள்ள அங்கன்வாடிப் பணியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்கி அமா்த்திட வேண்டும். கரோனா சிறப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி பணியாளா்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளா்களுக்கு பிரசவகால விடுமுறை 9 மாதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.