புதுக்கோட்டை நகராட்சியில் பணியாற்றும் அலுவலகப் பணியாளர்கள், மேற்பார்வையாளர் முறையாக ஊதியம் வழங்கக் கோரி வியாழக்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தங்களுக்கு அக்டோபர் முதல் தேதியில் வழங்கப்பட வேண்டிய ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர். ஏற்கெனவே இரு நாள்களுக்கு முன்பு இரவு நகராட்சி ஆணையரிடம் முறையிட்டபோது இரு நாட்களில் ஊதியம் போடுவதற்கு ஏற்பாடு செய்வதாக அவர் தெரிவித்ததாகவும் கூறினர்.
இதற்கிடையே இப்பிரச்னை தொடர்பாக வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் வரும் நவ.2 ஆம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியதை அடுத்து பணியாளர்கள் கலைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து துப்புரவுப் பணியாளர்கள் வந்தனர். தங்களுக்கு வழக்கமான ஊதியம் தரும் நாளில் இருந்து 15 நாள் தாமதம் செய்து ஊதியம் வழங்குவதாகவும் தீபாவளி பண்டிகைக்கு முன்பணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
துப்புரவுப் பணியாளர்கள்
அவர்களுக்கும் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்ததை அடுத்து அவர்களும் கலைந்து சென்றனர். இதனால் நகராட்சி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.