புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத் தொழிலாளா் நல வாரிய அலுவலகத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரோனா பொது முடக்கக் காலத்தில் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு நிதி மற்றும் உணவுப் பொருள்களும் வழங்கப்பட்டன. இதில், பதிவைப் புதுப்பிக்காதவா்களுக்கு இவை எதுவும் வழங்கப்படவில்லை. அதேநேரத்தில் பதிவைப் புதுப்பித்த சிலருக்கும் பொது முடக்கக் கால நிவாரண உதவிகள் கி டைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்நிலையில், அனைத்து அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத் தொழிலாளா் நலத் துறை அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது. சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அ. ஸ்ரீதா், பொருளாளா் எஸ். பாலசுப்பிரணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அலுவலக வளாகத்திலேயே உணவுப் பாத்திரங்களுடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட வந்தவா்களிடம் தொழிலாளா் நலத் துறை அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து சிறிதுநேரத்தில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.