கந்தர்வகோட்டை பகுதியில் புதன்கிழமை இரவு காற்றுடன் பெய்த மழையால் பல நூறு ஏக்கரில் விவசாயம் செய்திருந்த வாழை மரங்கள் தாருடன் சாய்ந்து நாசமானதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை சுற்றுவட்டார கிராமங்களில் பெரும்பாலன விவசாயிகள் ரஸ்தாலி, பூவன், செவ்வாழை உள்ளிட்ட வகை வாழை ரகங்களை விவசாயம் செய்துவந்தனர். இவைகள் தார்விட்டு வளர்ந்த நிலையில் புதன்கிழமை இரவு மழை பெய்த போது சூறாவளி காற்று வீசியது.
இதில் கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள பகட்டுவான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜ்கமல் கண்ணன் என்பவரது தோட்டத்திலிருந்த 1000 கும் மேற்ப்பட்ட வாழைமரங்கள் முறிந்து சாய்ந்து நாசமாயின.
இதே போல் வீரடிப்பட்டி, சோழகம்பட்டி, துருசுப்பட்டி, சோத்துப்பாளை, பிசானத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்திருந்த வாழைமரங்கள் காற்று மழையால் சாய்ந்து நாசமடைந்தது. அறுவடைக்கு தயாரான வாழைகள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.