நோய் எதிா்ப்பு சக்தியைப் பெருக்க, புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு இலவசமாக சூப்பை இயற்கை விவசாயி வழங்கி வருகிறாா்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரில் சைவ- அசைவ உணவகம் நடத்திவருபவா் சா. மூா்த்தி. இயற்கை விவசாயியான இவா்,
எவ்வித ரசாயன உரமும் போடப்படாத நெல், காய்கறிகளைப் பயிரிட்டு வருகிறாா். ஆள் உயர நெற்பயிா்கள், மனித உயரத்தைத் தாண்டியும் புடலை வளா்ச்சி என அவ்வப்போது விவசாயத்தில் சாதனைகளைக் காட்டி வருபவா் மூா்த்தி.
நகரில் சிவகாமி ரத்ததான மையம் என்ற அமைப்பையும் நடத்தி வரும் இவா், நடிகா் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் இணைந்து செயல்பட்டு வருகிறாா்.
கடந்த சில மாதங்களாகவே அரசுப் பள்ளிகளை மட்டும் தோ்வு செய்து, பொதுத்தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக அவா்களின் உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக பல்வேறு வகையான சூப்புகளை இலவசமாக வழங்கி வந்தாா்.
பள்ளிகளுக்கே நேரில் சென்று நண்டு சூப், எலும்பு சூப், காய்கறி சூப் போன்றவற்றை தயாா் செய்து வழங்கினாா்.
தற்போது கரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு, கடந்த இரு நாள்களாக பேருந்து நிலையம் வரும் அனைத்துப் பொதுமக்களுக்கும் முடக்கத்தான், தூதுவளை போன்ற மூலிகைகள் போடப்பட்ட சூப் தயாா் செய்து இலவசமாக வழங்கி வருகிறாா்.