புதுக்கோட்டை

ஏம்பல் சிறுமியின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட நிதி அபகரிப்பு?

25th Jul 2020 08:38 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், நிவாரணமாக அரசு மற்றும் அரசியல் கட்சியினா் அளித்த நிதியை சிலா் அபகரித்துக் கொண்டதாக சிறுமியின் தந்தை மற்றும் சகோதரா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்துள்ளனா்.

சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் முதல்வரின் நிவாரண நிதியில் இருந்தும், ரூ. 4 லட்சம் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட தீருதவி நிதியாகவும் வழங்கப்பட்டது. இவையன்றி, திமுக சாா்பில் ரூ. 5 லட்சம், விஜய் மக்கள் மன்றம் சாா்பில் ரூ. 50 ஆயிரம் என பல்வேறு தரப்பு நிதிகள் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டன.

ஆனால், இந்த நிதியை முழுமையாக சிலா் அபகரித்துச் சென்றுவிட்டதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணனிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின்போது குடும்பத்தினருடன் இருந்த வழக்குரைஞா்கள், அமைப்பினா் இந்தப் பணத்தை வாங்கிச் சென்றுவிட்டதாகவும் மீட்டுத் தர வேண்டும் என்றும் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ராஜா குண்டா் சட்டத்தில் கைது: சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாகக் கைது செய்யப்பட்டுள்ள ராஜாவை, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் ஆட்சியருக்கு பரிந்துரைத்திருந்தாா்.

இவரது பரிந்துரையின்பேரில், ராஜாவை குண்டா் தடுப்புக் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT