புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது:
பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் காரீப் கொள்முதல் பருவம் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் அதிகபட்ச அளவில் பயன்பெறும் வகையில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில் வெள்ளாளவிடுதி, ரெகுநாதபுரம், கீராத்தூா், மணமடை, காட்டாத்தி, மாங்கோட்டை ஆகிய கிராமங்களிலும், கந்தா்வகோட்டை வட்டத்தில் வீரடிப்பட்டி, மங்களாகோயில் (வெள்ளாளவிடுதி), குளத்துநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களிலும், இலுப்பூா் வட்டத்தில் இலுப்பூரிலும், ஆலங்குடி வட்டத்தில் வடகாடு, நெடுவாசல், எஸ்.குளவாய்ப்பட்டி ஆகிய கிராமங்களிலும், அறந்தாங்கி வட்டத்தில் ஆ.குடிகாடு, அமர சிம்மேந்திரபுரம் ஆகிய கிராமங்களிலும் என மொத்தம் 15 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செவ்வாய்க்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை தங்கள் கிராமங்களுக்கு அருகிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெறலாம்.