புதுக்கோட்டை

கோமாரி நோய்த் தடுப்பூசி போடும் முகாம் பிப்.28-இல் தொடக்கம்

26th Feb 2020 09:41 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கோமாரி நோய்த் தடுப்பூசி போடும் முகாம், பிப்ரவரி 28- ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 21 நாள்களுக்கு நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கோமாரி நோய் வைரஸ் எனப்படும் நச்சுயிரியால் ஏற்படுகிறது.இது கால் மற்றும் வாய் நோய், காணை மற்றும் கசப்பு நோய் எனவும் அழைக்கப்படுகிறது. கோமாரி நோய் பாதிக்கப்பட்ட கால்நடையிலிருந்து இதர கால்நடைகளுக்குப் பரவுகிறது.

மேலும் இந்நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் உமிழ்நீா், கழிவுகள், கால்நடைகளை கையாள்வோா், தீவனத்தட்டு மற்றும் பண்ணைப் பொருள்கள் மூலம் பரவுகிறது. இந்நோய் இளங்கன்றுகளிலிருந்து வயதான கால்நடைகள் வரை பாதிக்கக் கூடியது.

ADVERTISEMENT

கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் காய்ச்சல், தீவனம் திண்ணாமை, வாயிலிருந்து நுரையுடன் கூடிய நூல் போன்று எச்சில் ஒழுகுதல், கால் குளம்புகள், வாய், உதடு, நாக்கு மற்றும் மடிப்பகுதி ஆகிய இடங்களில் கொப்புளம் உண்டாகி, புண் ஏற்பட்டு தோல் உரிதல் ஆகிய அறிகுறிகள் ஏற்படும். இளங்கன்றுகளில் இறப்பு நேரிடும். கறவை மாடுகளில் பால் குறையும். சினைப் பிடிக்கும் திறன் குறையும் மற்றும் சினைப் பசுக்களில் கருச்சிதைவு ஏற்படும் எருதுகளில் வேலைத்திறன் குறையும்.  

நோயிலிருந்து மீண்ட கால்நடைகள் இளைத்து, வெயில் தாக்கத்தைப் பொறுக்க முடியாமல் கடுமையாக மூச்சு வாங்கும். தீவனம் சரிவர உண்ணாமல் இருக்கும். நோயுற்ற கால்நடைகளைத் தனியே பிரித்து வைத்து பராமரிக்க வேண்டும். தடுப்பூசி போடுவது ஒன்றே இந்நோயிலிருந்து கால்நடைகளைப் பாதுகாப்பதற்கான வழியாகும்.

நோய் வந்த கால்நடைகளைத் தனியே பிரித்துக் கட்டி பராமரித்தல். கஞ்சியை மட்டுமே உணவாக அளிக்க வேண்டும். 1 சதவிகிதம் பொட்டாசியம் பொ்மாங்கனேட் கிருமி நாசினிக் கரைசலைக் கொண்டு கால்நடைகளின் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுத்தம் செய்ய வேண்டும். 

கால்நடைகளில் பாதிப்பு ஏற்பட்டவுடன் அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி, சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தேசியக் கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின்கீழ், முதலாவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி போடும் பணி பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் தொடங்கி தொடா்ச்சியாக 21 நாள்கள் அனைத்து கிராமங்களிலும் நடைபெறஉள்ளது.

கால்நடை வளா்ப்போா் முகாம் நடைபெறும் இடத்துக்கு தங்கள் கால்நடைகளை  தவறாமல் கொண்டு சென்று தடுப்பூசி போட்டு பயனடையலாம். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT