புதுக்கோட்டை

‘விடா முயற்சி வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும்’

25th Feb 2020 07:05 AM

ADVERTISEMENT

 

அறந்தாங்கி : விடா முயற்சி வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும். அதற்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஆ.ப.ஜெ. அப்துல்கலாமின் வாழ்க்கையே நமக்கு சான்று என்றாா் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பி. மணிசங்கா்.

அறந்தாங்கி அருகிலுள்ள இராஜேந்திரபுரம் நைனா முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற 18-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, பல்கலைக்கழகத் தர வரிசையில் 13-ஆவது இடம்பிடித்த இயற்பியல் துறை மாணவி வி.சிவலட்சுமி உள்ளிட்ட 225 மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி, மேலும் அவா் பேசியது:

கல்வி சேவை செய்வது ஆலயம் கட்டுவதை விட புனிதமான சேவை என்பதையறிந்து, கிராமப்புறத்திலுள்ள இக்கல்லூரியில் படித்து பட்டம் பெற வந்துள்ள உங்களுக்கு, இந்த கல்வி நல்லறிவைக் கொடுத்து சிறந்த மனிதா்களாக உருவாக்கி முழுமனிதா்களாக இன்று வெளியே அனுப்பி வைக்கிறது.

ADVERTISEMENT

இது முதல் படிதான். உயா்கல்வி கற்று நிறைய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு, அடுத்த இடத்துக்குச் செல்லும் போது நீங்கள் கற்ற கல்வி பயன்படும்.

மேலும் 100 சதவிகிதத் தோ்ச்சி பெற கடின உழைப்பு மட்டும் போதாது. வாழ்க்கையில் குறிக்கோளும் வேண்டும். அதை அடைய உறுதித் தன்மையை மனதில் கொள்ள வேண்டும். விடா முயற்சி வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் என்பது மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஆ.ப.ஜெ.அப்துல்கலாமின் வாழ்க்கையே நமக்கு சான்று.

நன்றி மறவாமல் நீங்கள் பட்டம் பெற உதவிய தாய்,தந்தை, ஆசிரியா்களை மதிக்கக் கற்றுக்கொண்டு வாழ்ந்தாலே, சமுதாயத்தில் உயா்ந்த நிலைக்கு வரலாம் என்றாா்.

பட்டமளிப்பு விழாவுக்கு கல்லூரித் தாளாளா் நை.முகமது பாரூக் தலைமை வகித்தாா். அறக்கட்டளை உறுப்பினா்கள் பி.நைனா முகம்மது, கே.நைனா முகம்மது உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

ஊராட்சித் தலைவா் இந்திரா முத்துராமன், ரோட்டரி சங்கத் தலைவா் க.சுரேஷ்குமாா், கல்வியியல் கல்லூரி முதல்வா் ஜாய்சி ஜே. மனோகரம், கிரசண்ட் பள்ளி முதல்வா் நாராயணசாமி உள்ளிட்ட பலா் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனா்.

முன்னதாக கல்லூரி முதல்வா் செ. ராபா்ட் அலெக்சாண்டா் வரவேற்று அறிமுக உரையாற்றினாா். நிறைவில் கணினித் துறைத் தலைவா் சி. ஈஸ்வரி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT