புதுக்கோட்டை

புகை, மதுப்பழக்கம் இதய நோய்க்கான காரணிகள்

29th Sep 2019 03:47 AM

ADVERTISEMENT


புகை பிடித்தல், மது அருந்துதலே இதய நோய்களுக்கு முக்கிய காரணமாகிறது என்றார் ஆலங்குடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மு.பெரியசாமி.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற உலக இதய விழாவுக்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியது:
இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் சுமார் 5,860 பேர் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். மாரடைப்பு பெரும்பாலும் 20 முதல் 65 வயதிற்குள்பட்டவர்களிடம் நிகழ்கிறது. தற்போது, கிராமத்தில் உள்ளவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.  மது அருந்துதல், புகை பிடித்தல், துரித உணவுகளை அதிகமாக உண்ணுதல், உடல் உழைப்பு இல்லாமையே மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணங்களாகிறது. இதனால் ரத்த அழுத்தம், நீரழிவு நோய், அதிக உடல் பருமன் ஏற்படுகிறது. மொத்த இறப்பு விகிதத்தில் 20% இதய நோய்களால்  உண்டாகிறது. அதில் 60% மாரடைப்பினால் ஏற்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் மருத்துவ ஆலோசனை இல்லாமல் உட்கொள்ளும் மருந்துகள், பெற்றோர்கள் மது அருந்துவதால் 100 குழந்தைகளில் 1 குழந்தைக்கு பிறக்கும் போதே இதய குறைபாட்டுடன் பிறக்கிறது.  உப்பின் அளவை குறைவாக சாப்பிடுதல், எடையை சரியாக வைத்துக்கொள்ளுதல், புகை பிடிக்காமல் இருத்தல், துரித உணவுகளைத் தவிர்த்தல், ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்தல், இரவில் 6 மணிநேரம் இடையூறின்றி தூங்குதல் போன்றவற்றால் முற்றிலுமாக ரத்த அழுத்தம், நீரழிவு, வாதம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம். ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் இதற்கான பரிசோதனை, சிகிச்சையும் வழங்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள்  அனைவரும் உடல் பரிசோதனை செய்து கொள்ளுதல் அவசியம் என்றார்.
நிகழ்வில், பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு  இதயப் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கொழுப்பு சத்து, எடை, உயரம், இசிஜி ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டு அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டன. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT