புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தடையின்றி பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் ஏஎல். ராசு தலைமை வகித்தார். அக் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர் வே. துரைமாணிக்கம் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
நிறைவேறிய தீர்மானங்கள்: தமிழகத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தக் கூடாது என தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஜனநாயகப் பூர்வமாக நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுக்கிறது. அடக்குமுறையை ஏவி போராடியவர்கள் மீது வழக்கு போடப்படுகிறது. இது ஜனநாயக விரோதம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு முரட்டுத்தனமாக அமல்படுத்த முயற்சிப்பதை கைவிட வேண்டும்.கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் மாவட்டம் முழுவதும் தடையின்றி பாதுகாப்பான குடிநீர் கிடைக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் ஜூலை 2ஆம் தேதி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.